''நான் கண்ணாடியே போடலை.. எப்படி ஆபாச படம் பார்ப்பேன்?''-இது கர்நாடக மாஜி அமைச்சர்!
பலான படம்
கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
தாங்கள் இந்த தவறை செய்யவில்லை என்றும், இதுபற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர்கள் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பேரவைத் தலைவரும் இதனை ஏற்று பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீசைலப்பா பிதருர் எம்.எல்.ஏ. தலைமையில் பேரவை கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. மார்ச் 13-ந் தேதிக்குள் இதன் அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டு இருக்கிறார். இக்குழுவில் இடம் பெற எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) மறுத்துவிட்டது.
விசாரணைக்கு ஆஜர்
இந்த நிலையில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் அக்குழு சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன் பேரில் பேரவைக் குழுத் ஸ்ரீசைலப்பா பிதருர் தலைமையிலான குழு முன்பு லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
ஆப்கானிஸ்தானில் சித்திரவதைக்குள்ளானோர் படமாம்:
ஆப்கானிஸ்தானில் சித்தரவதைக்குள்ளானோர் பற்றிய வீடியோ காட்சிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனுடன் ஆபாச படமும் யதேச்சையாக வந்துவிட்டது என்றார்.
கண்ணாடி போடாமல் பார்க்க முடியாதாம்
சி.சி.பாட்டீல் கூறியதாவது: இந்த விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இல்லை. சவதியிடம் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யுமாறுதான் கூறினேன். என்னால் கண்ணாடி அணியாமல் எதையும் படிக்கவும் பார்க்கவும் முடியாது. ஆபாச படம் பார்த்ததாக சொல்லப்படும் நேரத்தில் நான் கண்ணாடியே அணியவில்லை என்றார் அவர்.
கொண்டுவந்தேன், ஆனால் பார்க்கவில்லை
கிருஷ்ண பாலேமர் கூறியதாவது: வழக்கமாக எனது மொபைல்போன்களை பேரவைக்கு கொண்டுவருவதில்லை. அன்றைய நாளில் நான் மொபைல் கொண்டுவந்தது உண்மை.ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்றார்.
விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீசைலப்பா பிதரு கூறியதாவது:
ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான மூன்று பேரும் நேரில் ஆஜராகி பேரவைக் குழுவிடம் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர். அடுத்த கூட்டம் வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பேரவைத் தலைவரை சந்தித்து 13-ந் தேதிக்குள் தங்களால் அறிக்கை சமர்ப்பிக்க இயலாது என்று கூறி காலஅவகாசத்தை நீடிக்குமாறு கேட்கவுள்ளோம். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படம் பார்த்ததாக குழுவின் உறுப்பினர் நேரு ஒலேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்படி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். சட்டம் அனுமதித்தால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்புவோம் என்றார் அவர்.