தனியார் சட்டக்கல்லூரி துவங்க வேண்டுமா?- அரசின் விதிமுறைகளைப் பாருங்கள்!
மதுரை: தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது
தனியார் சார்பில் சுயநிதி சட்டக்கல்லூரி துவங்குவது குறித்தும், கல்லூரிகளுக்கான தடையில்லா சான்றுகள் (என்.ஓ.சி) குறித்தும் ஏராளமான விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த சட்டக் கல்வி இயக்குனரகம், தனியார் சுயநிதி சட்டக் கல்லூரிகளுக்கான என்.ஓ.சி வழங்குதல் தொடர்பாக சில வழி காட்டுதல் நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.
அதன்படி தனியார் சுயநிதி சட்டக்கல்லூரிகள் துவங்க பதிவு செய்யப்பட்ட டிரஸ்ட் அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாவட்ட நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம் ஆகியவை அமைந்திருக்கும் பகுதிகளில் கல்லூரிகள் துவங்க வேண்டும். போக்குவரத்து உள்ள பகுதிகளில் கல்லூரி அமைய வேண்டும்.
குப்பை சேகரிக்கும் இடம், குவாரிகள், திறந்தவெளி சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள், டிஸ்டில்லரீஸ் ஆகியவை அமைந்துள்ள இடங்களில் சட்டக்கல்லூரி துவங்க அனுமதி இல்லை.
கல்லூரி அமையும் இடம் மாநகராட்சி எல்லையாக இருந்தால் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்க வேண்டும். இந்த இடம் சொந்த இடமாகவோ அல்லது 10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான இடமாகவோ இருக்க வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு வெளியே கல்லூரி அமைந்தால், பரப்பளவு 10 ஏக்கராக இருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட சட்டவிதிகளின் கல்லூரியின் வகுப்பறை கட்டிடங்கள், இதர பிரிவு கட்டிடங்கள் மற்றும் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்திருக்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் காப்புத் தொகை அரசு வங்கியில் செலுத்த வேண்டும். ரூ.20 லட்சத்துக்கான வங்கி உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும். யு.ஜி.சி விதிகளின்படி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்ற அளவில் இருக்க வேண்டும்.
மேற்கண்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அரசிடம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் டிரஸ்ட் அல்லது சங்கம் பதிவு செய்யப்பட்ட சான்று, டிரஸ்ட் நிர்வாகிகள் விவரம், இடத்துக்கான ஆவணங்கள், சம்பந்தப்பட்ட நிலம் குறித்த வருவாய்த் துறையினர் சான்று, கட்டிட வரைபடம் உள்ளிட்ட விவரங்களோடு, தடையில்லா சான்று சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் ரூ.25,000 மதிப்பிலான சலான் இணைக்கப்பட வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை சட்ட கல்வி இயக்குனரகம் உரிய முறையில் பரிசீலனை செய்து, கல்லூரி அமைப்பது குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.