உத்தரப் பிரதேச முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்!
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 403 தொகுதியில் 224 இடங்களில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது.
முலாயம் சிங்கை விட அவரது அகிலேஷ் யாதவ் மீதே மக்கள் அதிக நம்பிக்கை வைத்து சமாஜ்வாடிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
இந் நிலையில் அகிலேஷ் யாதவையே முதல்வராக்க முலாயம் சிங் விரும்புகிறார். அதற்கு அகிலேஷ் யாதவும் தயார்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதை எதிர்த்தனர். தங்களை விட வயதில் மிகவும் குறைந்த அகிலேஷ் யாதவிடம் பணிந்து செல்ல முடியாது என்று இவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து இவர்களுடன் முலாயம் சிங் பேச்சு நடத்தினார். அகிலேஷ் யாதவுக்கு கட்டுப்பட்டு ஆஸம் கான் நடக்க வேண்டியதில்லை என்றும், அவர் விரும்பினால் சபாநாயகராகலாம் என்றும் முலாயம் கூறிவிட்டார்.
அதே நேரத்தில் தனது தம்பியை குடும்ப உறுப்பினர்களை வைத்து சமாதானப்படுத்திவிட்டார்.
இதையடுத்து இன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி எம்எல்ஏக்களின் கூட்டம் லக்னெளவில் நடக்கிறது. இதில் உத்தரப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படவுள்ளார் என்று தெரிகிறது.
அகிஷேலின் பெயரை ஷிவ்பால் சிங் முன்மொழிவது என்றும், அதை ஆஸம்கான் வழிமொழிவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.என்ஜினீயரிங் பட்டதாரியான அகிலேஷ் யாதவ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மக்களவை எம்பியாகவும் உள்ளார்.
அவர் முதல்வரானால் 6 மாதத்துக்குள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.