ஜெனீவா தீர்மானம்: சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்ட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மான் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த ஆணையிடக்கோரி ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். இதே கோரிக்கையை தமிழகத்திலுள்ள மற்ற அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா 2 முறை கடிதம் எழுதியும் அதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவந்த மத்திய அரசு, இந்த முறையும் துரோகம் செய்ய தயாராகிவிட்டதையே மத்திய அமைச்சர் கிருஷ்ணாவின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் 2 நாடுகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.
இதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, அதில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க கோரும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவருக்கு துணை நின்றவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவேண்டும்.
இதற்கான முன்முயற்சிகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.