3 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
பெங்களூரூ: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை முதல் 3 நாட்களுக்கு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பாகிஸ்தானில் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவர் வர்த்தக தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், மாணவர்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இருநாட்டு மக்களிடையே நட்புறவை மேம்படுத்துவதே பயணத்தின் நோக்கம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீஸ்ரீ பாகிஸ்தானுக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். அவர் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் சென்றார். அதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற முதல் இந்து மதத் தலைவர் என்ற பெயர் பெற்றார்.
தற்போது பாகிஸ்தான் செல்லும் அவர் அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார். அவர் வாகா எல்லை மூலம் லாகூர் சென்று அங்கிருந்து இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி செல்கிறார்.