பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதி ஆட்சிக்காலம் முடிந்துள்ளது- பிரதீபா
வழக்கமாக பிப்ரவரி 2வதுவாரத்திலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி விடு்ம். ஆனால் இந்த முறை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறுக்கிட்டதால் அதில் தாமதம் ஏற்பட்டு இன்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது...
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சினை வியாபித்து சூழ்ந்துள்ளது. இந்தியாவும் அதற்கு விலக்கல்ல. இந்த சூழ்நிலைக்கு மத்தியில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தின் பாதியை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ மேலானதாக உள்ளது. விரைவில் 9 சதவீத வளர்ச்சி என்ற பாதைக்கு இந்தியா திரும்பும்.
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய அரசு முனைப்புடன் உள்ளது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு உறுதியான நடவடிக்கைளை எடுத்தது. ஊழல் ஒழிப்பை உறுதிப்படுத்த வலுவான சட்டம் வடிவமைக்கப்படும்.
நாடு முழுவதும் நிலவி வரும் மருத்துவர் பற்றாக்குறையைத் தீர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
2012ன் முதல் 2 மாதங்களில் பண வீக்கம் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தர நடவடிக்கை எடுக்கப்படும். விளைமுதல் கொள்முதலுக்கு அரசு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வரும்.
நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு தருதல் ஆகியவற்றுக்குப் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
இந்த அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக தனித் துறை அமைக்கப்படும் என்றார் அவர்.
வருகிற 14ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 15ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு நாளை தொடங்கும். 14ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை திணேஷ் திவிவேதி தாக்கல் செய்கிறார். 15ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பின்னர் 16ம் தேதி பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
30ம் தேதி வரை முதல் கட்ட கூட்டத் தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 23ம் தேதி விடுமுறை விடப்பட்டு 24ம் தேதி தொடங்கி மே 22ம் தேதி வரை இடைவிடாமல் கூட்டத் தொடர் நடைபெறும்.
கருப்புப் பணப் பிரச்சினை மட்டுமல்லாமல், பொருளாதார மந்த நிலை, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை தொடர் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பக் காத்துள்ளன.
பயங்கரவாத தடுப்பு மையம் குறித்தும் சூடான விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக கட்சிகள் குறிப்பாக திமுகவைச் சேர்ந்தவர்கள், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிப்பது குறித்து பிரச்சினை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் இன்று அவர் தனது உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.