நாட்டிலேயே நல்லாட்சி தருவது காங்கிரஸ் தான்: சிரஞ்சீவி 'ஜிங் சக்'
ஹைதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் கனவு ஒருநாளும் பலிக்காது என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் கோவூர் தொகுயில் மட்டும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. மற்ற 6 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி கோவூர் தொகுயில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டது. அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளால் அவருக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் கிடைத்துள்ளது.
ஆந்திராவில் இனி வாரிசு அரசியல் நடக்காது. எப்படியாவது முதல்வர் பதவியைப் பிடித்துவிட மாட்டோமா என்ற ஜெகனின் கனவு ஒரு நாளும் பலிக்காது. இனியும் ஆந்திர மக்கள் யாரையும் நம்பி ஏமாறமாட்டார்கள்.
நாட்டிலேயே நிலையான நல்லாட்சி தருவது காங்கிரஸ் தான். அதனால் ஆந்திர மக்கள் மீண்டும் காங்கிரஸைத் தான் ஆட்சியில் அமரவைப்பார்கள் என்றார்.