பணம் படைத்தவர்களுக்கே பதவியா?: குமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ராஜினாமா
நாகர்கோவில்: குமரி மாவட்ட தேமுதிக மாவட்ட துணை செயலாளர் மில்லர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் மாவட்ட கழக துணை செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்தேன். கழகம் அறிவித்த போராட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்.
கடந்த சில மாதங்களாக கட்சி சார்பில் போராட்டங்கள், கூட்டங்கள் குறித்து எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் தரப்படாமல் ஒதுக்கப்பட்டு வந்தேன். அண்மையில் நடந்த கட்சி தேர்தலில் கூட எனக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை.
தற்பொழுது அடிமட்ட தொண்டர்களை புறக்கணித்துவிட்டு பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நான் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலையில் இருப்பதாக உணர்கிறேன். ஆகவே நான் வகித்த மாவட்ட துணை செயலாளர் பதவியை இன்று முதல் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.