சுமங்கலி திட்டத்தின்கீழ் 2 லட்சம் பெண் கொத்தடிமைகள்: ஜேம்ஸ்விக்டர்
சிவகங்கை: சுமங்கலித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் 2 லட்சம் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக உள்ளதாக திருப்பூர் மக்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ்விக்டர் தெரிவித்துள்ளார்.
சுமங்கலி திட்டம் குறித்த கருத்தரங்கம் சிவகங்கையில் நடந்தது. இக்கருத்தரங்கில் திருப்பூர் மக்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ்விக்டர் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழக கிராமங்களில் வறுமையால் வாடும் இளம் பெண்களின் பட்டியலை பஞ்சாலை முதலாளிகள் தயாரித்து தரகர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தினரை அணுகுகின்றனர். பெற்றோரிடம் சுமங்கலி திட்டம் குறித்து பேசி 3 வருட முடிவில் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை தருவதாக ஒப்பந்தம் போட்டு இளம்பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஆனால் 3 வருட முடிவில் பேசியபடி பணம் கொடுப்பதில்லை. இது போன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் இளம் பெண்கள் சுமங்கலி திட்டத்தில் பணிபுரிகிறார்கள்.
5 பேர் இருக்கிற அறையில் 20 பேரை தங்க வைக்கின்றனர். பாலியல் தொந்தரவு செய்கின்றனர். குறிப்பாக தொழிலாளர் நலச் சட்டங்களை பின்பற்றுவதே இல்லை.
ஒரு தொழிற்சாலையில் மொத்த தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அப்ரண்டிஸ் தொழிலாளர்களாக இருக்க வேண்டும் என்பது தொழிலாளர் நலச் சட்டமாகும். ஆனால் 100 சதவீத தொழிலாளர்களும், குறிப்பாக இளம் பெண்கள் அப்ரண்டிஸ்களாக வேலை செய்து வரும் நிலை தொடர்கின்றது. தொழிலாளர் ஆய்வாளர்களும் இதனை கண்டு கொள்வதே இல்லை. வேலை செய்கிற இளம் பெண்களின் பெயர்களை மாற்றி பதிவு செய்து வேலை வாங்குகிறார்கள்.
தமிழக அரசு இளம் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறுமையால் வதைபடும் பெண்கள் அனைவருக்கும் திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கம் செய்திட வேண்டும். பஞ்சாலைகளில் வேலை செய்கிற இளம் பெண்களுக்கு தொழிலாளர் நலச்சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.