ஓட்டுக்கு பணம்: போட்டோ எடுக்க முயன்ற நக்கீரன் போட்டோகிராபரை தாக்கிய அதிமுகவினர்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவதால் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள லட்சுமிபுரம் 5வது தெருவில் அமைச்சர் விஜய் உடன் சென்ற அதிமுகவினர் அத்தெருவில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் வழங்கியதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே அந்த சம்பவத்தை நக்கீரன் போட்டோகிராபர் ராம்குமார் என்பவர் படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவினர் சிலர் ராம்குமாரின் செல்போன் மற்றும் கேமராவை பறித்துக் கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரது நெஞ்சு, கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் போட்டோகிராபர் மீதான தாக்குதலுக்கு பத்தரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.