For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளியாட்கள் இருக்கக் கூடாது: பிரவீண் குமார்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சங்கரன்கோவிலில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. இதனால் அங்கு பிரசாரம் செய்வதற்காக வந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், சங்கரன்கோவில் தொகுதி வாக்காளராக இல்லாதவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (16ம் தேதி) மாலை 5 மணி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி நாளை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்துவதற்கும், அவற்றில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

தேர்தல் பற்றிய படக்காட்சி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு எதுவும் செய்யக்கூடாது. பொதுமக்களை கவரும் வகையில் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

தேர்தல் பிரசாரத்திற்கு வேறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து பிரசாரம் செய்வதற்காக வந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், சங்கரன்கோவில் தொகுதி வாக்காளராக இல்லாதவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு மேல் சங்கரன்கோவில் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாராவது இருக்கிறார்களா என்று போலீசார் சோதனை மேற்கொள்வார்கள்.

இந்த சோதனை மூலம் சங்கரன்கோவில் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். சங்கரன்கோவில் தொகுதியின் எல்லைகளில் வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு மற்ற தொகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாகன அனுமதி நாளை மாலை 5 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும். தேர்தல் நாளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். வேட்பாளரின் சொந்த பயன்பாடு, தேர்தல் ஏஜெண்ட்டின் பயன்பாடு, வேட்பாளரின் ஆதரவாளர்கள் அல்லது கட்சித் தொண்டர்கள் ஆகியோரது பயன்பாடு ஆகியவற்றிற்கு தலா ஒரு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு அந்த அனுமதி செல்லுபடியாகாது. தேர்தல் நாளில் மேற்கண்ட 3 வாகனங்கள் மட்டுமே அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதிக்கப்படும். பொதுமக்கள் தங்களது வாகனங்களை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஓட்டுப் போடுவதற்காக வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கோ, பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கோ அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இத்தகைய செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி லஞ்சம் கொடுப்பது போன்ற தண்டனைக்குரிய குற்றமாகும்.

வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியினரோ தங்களது பிரச்சார அலுவலகத்தை அமைத்துக் கொள்ளலாம். அதில் 2 பேர் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். அங்கு தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. இந்த முகாம்களில் இருந்து உண்ணக்கூடிய பண்டங்களை விநியோகிக்கக்கூடாது.

தேர்தல் நாளில் இந்த முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதிகாரிகள் திடீர் சோதனையின்போது காண்பிப்பதற்காக அவர்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இந்த முகாம்களில் இருப்பவர்கள் குற்றச் செயல்கள் புரிந்தவர்களாக இருக்கக் கூடாது.

கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு முடிந்த பிறகு சில வாக்குச்சாவடி அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை' அழுத்தாததால் ஏதாவது தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கியிருக்கிறது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை' தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் மறக்காமல் அழுத்தி வாக்குப்பதிவு முடிவுற்றது என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும் அதனைக் குறிக்கும் வகையில் 17 ஏ படிவத்தின் கடைசி பகுதியில் கோடிட்டு அதன் அடியில் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும், எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதைக் குறிக்கும் 17 சி படிவத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை அனைத்து தேர்தல் ஏஜெண்டுகளுக்கும் அவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
TN chief electoral officer Praveen Kumar has released a long list of rules to be followed from 16th march evening till 18th evening in Sankarankovil. Sankarankovil bypoll will be held on march 18 so the campaign ends at 5pm tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X