இனி மானியங்கள் பெருமளவு 'கட்'. ரேஷன், விவசாயத்தில் மட்டும் குறைந்த அளவு தொடரும்!
டெல்லி: கடந்த இரு ஆண்டுகளாக 8.4 சதவீதம் வளர்ச்சி கண்ட இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் 6.9 சதவீதமாக சரிந்துவிட்டதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
அதே நேரத்தில் அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பிரணாப் கூறியதாவது:
ஐரோப்பிய பொருளாதாரத் தேக்கமும், சர்வதேச அளவிலான பொருளாதார சீர்குலைவுகளும் இந்தியாவையும் பாதித்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிபக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை. கடந்த இரு ஆண்டுகளாக சரிவை சந்தித்த நமது உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது. ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனாலும் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இப்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறைய ஆரம்பிக்கும். அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% சதவீதமாக உயரும்
கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருப்புப் பணம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
மானியங்களால் நிதிப் பற்றாக்குறை:
நேரடி வரிகளின் வருவாய் குறைந்ததாலும், அதிகரித்து வரும் மானியங்களாலும் நிதி நிலைமை மோசமானது.
இதனால் மானியங்களை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை (current account deficit) 3.6 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம் வழங்கப்படும். விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும்.
பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்திலேயே உள்ளது கவலை தருகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.