வெளிநாட்டு நிதி பெற விமான நிறுவனங்களுக்கு அனுமதிப்பது பற்றி பரிசீலனை: பிரணாப்
நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய விமானத்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதமாக ஓராண்டு காலத்துக்கு 1 பில்லியன் டாலர் கடனாக பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
விமானசேவை துறையில் 49 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்திய விமானசேவை துறையில் முதலீடு செய்வதற்கான தடையானது பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
இதேபோல் விமான நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை செலவினங்களுக்கு ஏற்ப மாற்றிய அமைப்பதும் அவசியம் என்றார் அவர்.
இந்திய விமான நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 2.5பில்லியன் டாலர் தொகை தேவைப்படுகிறது. இதில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் 1.32 பில்லியன் டாலர் தேவை உள்ளது.