பாதுகாப்பு துறைக்கு ரூ1.93 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-சி.பி.ஐக்கு 15% கூடுதல் நிதி
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:
2011-12ம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு ரூ1 லட்சத்து 64 ஆயிரத்து 415 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பு 2012-13ம் ஆண்டில் கூடுதலாக ரூ. 28 ஆயிரத்து 992 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி.
இதில் ராணுவத்துக்கு மட்டும் ரூ. 79 ஆயிரத்து 579 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் இது கூடுதலாகும். மத்திய ஆயுதப் படை காவலர்களுக்கான வீடுகள் கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ. 1,185 கோடியும் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 3,280 கோடியும் இதில் அடக்கம்
சி.பி.ஐக்கு கூடுதல் நிதி:
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐக்கும் 15 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2011-12ம் நிதியாண்டில், ரூ. 344.64 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இந்த நிதி 15 சதவீதம் ரூ. 395.77 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இ-கவர்னன்ஸ், நவீனமயம், பயிற்சி மையங்கள் அமைத்தல், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப சப்போர்ட் யூனிட்கள் அமைத்தல், சி.பி.ஐ கிளை அலுவலகங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.