உபரி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ 90000 கோடி திரட்ட அரசு திட்டம்!
அடுத்த மூன்றாண்டுகளில் இந்த ஏலம் படிப்படியாக நடக்கும்.
நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் இதுகுறித்து கூறியிருந்தார் பிரணாப் முகர்ஜி.
அவரது திட்டப்படி, வரும் நிதியாண்டில் ரூ58,217 கோடி வரியல்லாத வருமானம் ஈட்ட வேண்டும். நடப்பு நிதியாண்டில் இது ரூ16,550 கோடியாக மட்டுமே உள்ளது. இதில் அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ 40 ஆயிரம் கோடி கிடைக்கும். அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தலா ரூ25 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம் விடப்படும்.
இப்போது செல்போன் நிறுவனங்களிடம் உபரியாக உள்ள 6.2 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை, மத்திய அரசிடம் உள்ள அலைக்கற்றை விற்பனை மற்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்த 122 வட்டங்களுக்கான 2ஜி அலைக்கற்றையை மீண்டும் ஏலம் விடுவது ஆகியவற்றின் மூலம் இந்த தொகை கிடைக்கும்.
செல்போன் நிறுவனங்களிடம் உபரியாக உள்ள அலைக்கற்றை காரணமாக அரசுக்கு கடந்த ஆண்டில் ரூ36,993 கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை தலைமை அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.