இத்தாலியர்கள் கடத்தலைத் தொடர்ந்து நக்சல் தேடுதல் நடவடிக்கையை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தல்
ஒரிசாவின் கந்தமால்-கஞ்சம் மாவட்ட எல்லையில் இந்தியர் இருவர் மற்றும் இத்தாலியர் இருவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். இந்தியர்களை விடுவித்த மாவோயிஸ்டுகள், இத்தாலியர்களை பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.
தமது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் உட்பட பழங்குடி மக்கள் 500 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட 13 கோரிக்கைகளை முன்வைத்து ஒலிநாடா ஒன்றையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஒரிசா அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணாவை கடத்தியபோது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளையே தற்போதும் மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வினீல் கிருஷ்ணாவை 9 நாட்களுக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் விடுவித்திருந்தனர்.
கடந்த முறை அரசு தூதராக செயல்பட்ட தண்டபாணி மொக்ந்தியையே தற்போது ஒரிசா அரசு நாடியிருக்கிறது. இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் இத்தாலியர்களை உடனே விடுவிக்குமாறு ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இத்தாலிய தூதரக அதிகாரிகளும் புவனேஸ்வரில் முகாமிட்டு மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.