இலங்கை பிரச்சனை: பிரதமர் அறிவிப்பால் வேலைநிறுத்தம் ரத்து: பழ. நெடுமாறன்
மதுரை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததையடுத்து வரும் 23ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் நாளான மார்ச் 23ம் தேதி அன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதை நாங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் மார்ச் 23 ம் தேதி அன்று நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகின்றது.
அதே வேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் இன அழிப்புப் போர்க் குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைக் குழுவின் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றத் திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சிகள், தமிழ் அமைப்புகள், வணிகர் சங்கப் பேரவை மற்றும் தொழிற்சங்கங்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.