150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்!
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 150 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவில் முக்கிய உறுப்பினர் ஆவார். போராட்டக் குழுவில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை இவர் சந்தித்துள்ளார். அதேபோல பிரதமரை சந்தித்த குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இடிந்தகரையில் உள்ள புனித லூர்து மாதா ஆலயம் முன்பாக போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் இன்று உண்ணாவிரதம் தொடங்கியது. தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக உதயக்குமார் அறிவித்துள்ளார். கைது நடவடிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.