2 கால் மூட்டுக்களிலும் கோளாறு- வெளிநாடு போக பாஸ்போர்ட் கோரும் சரவண பவன் ராஜகோபால்!
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கொடைக்கானலில் வைத்துக் கொலை செய்யப்பட்டு உடலை மலையில் போட்டு விட்டனர். இந்த பரபரப்புக் கொலை வழக்கில், ராஜகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து ராஜகோபால் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் அப்பீல் செய்து, ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக் கோரி சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், என் மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நான் மேல்முறையீடு செய்துள்ளேன்.
இந்த நிலையில் எனக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. எனது 2 கால் மூட்டுகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா நாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆனால் என் மீதான வழக்கு தொடர்பாக எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. அதை புதுப்பிப்பதற்காக முன்பு மனு தாக்கல் செய்திருந்தேன். சில நிபந்தனைகளை விதித்து பாஸ்போர்ட்டை கோர்ட்டு எனக்கு வழங்கியது.
நிபந்தனைகளின்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்துவிட்டு மீண்டும் கோர்ட்டில் அதை ஒப்படைத்துவிட்டேன். மீண்டும் பாஸ்போர்ட் தேவைப்பட்டால் கோர்ட்டின் அனுமதியோடு பெறலாம் என்றும் முன்பு உத்தரவிடப்பட்டது.
நான் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என்னை நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக நான் எனது உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
எனவே நான் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ராஜகோபாலுக்கு பாஸ்போர்ட்டைத் தர ஜீவஜோதி கணவர் வழக்கை விசாரித்த வேளச்சேரி காவல் நிலையம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வருகிற 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தவிர சில மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் மற்றும் குடும்பத்தினர் மீது நிலத்தை ஆக்கிரமித்ததாக ஒரு புகார் எழுந்தது என்பது நினைவிருக்கலாம்.