ஐ.நா. தீர்மானம்: பொறுப்பாக முடிவு எடுங்கள்- இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பெரிஸும், கிருஷ்ணாவும் தொலைபேசியில் பேசியதை வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உறுதி செய்தார். இந்தியா அண்டை நாடு மட்டுமின்றி இலங்கையில் நிலவும் சூழலை நன்கு அறிந்த நாடுமாகும். அதனால் ஐ.நா. தீர்மானம் குறித்து பொறுப்புணர்வுடன் முடிவு எடுக்குமாறு பெரிஸ் கிருஷ்ணாவை கேட்டுக் கொண்டதாக மத்தாய் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலை குறித்து கேட்டதற்கு மத்தாய் கூறுகையில், பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கம் தான் எனது பதில் என்றார்.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. அதில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து தான் பெரிஸ் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஜி.எல். பெரிஸ், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகர் ராஜீவ விஜயசேன ஆகியோர் ஜெனீவாவில் தங்கி பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.