லோக்பால்: முட்டுக்கட்டையில் முடிந்த பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பான பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் முட்டுக்கட்டையில் முடிந்தது!
டெல்லி: மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்பட்டாமல் முட்டுக்கட்டையில் முடிந்தது.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜகவின் அருண்ஜேட்லி, பகுஜன் சமாஜின் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தளாத்தின் ராம் கிர்பால் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், தேசியவாத காங்கிரஸின் தரீக் அன்வார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி. பரதன். அதிமுகவின் மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம். அந்தோணி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசின் லோக்பால் மசோதாவில் மொத்தம் 97 திருத்தங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இத்னால் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், பலன் அளிக்கக்கூடிய லோக்பால் மசோதாவைக் கொண்டுவர தனது அரசு கடமைப்பட்டுள்ளது என்றார்.
கட்சிகளின் கருத்து
ஆனால் பாஜக சார்பில் பேசிய பிரகாஷ் ஜவ்தேகர், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஊழலை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு உண்மையில் ஆர்வமில்லை என்றார்.
இக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், பிரதமர் பதவியை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவரக் கூடாது என்றும் லோக் ஆயுக்தாவை அமைப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இடதுசாரிகளோ, தொண்டு நிறுவனங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி கூறுகையில், லோக் ஆயுக்தாவை அமைத்துக் கொள்ளும் முடிவை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும் என்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பாலின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. மோகன்சிங் கூறுகையில், அனைத்துக் கட்சிகளுமே வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவே விரும்புகின்றனர். விரைவில் இது நிறைவேறும் என்றார்.