'மச்சினிச்சி'யைக் கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆன 'அத்தான்' கைது!
சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மைத்துனியை கொலை செய்த அக்கா கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் கல்பனா (21). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் துப்புரவு சூபர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது அக்கா கணவர் சரவணனுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், இவரது கல்பனாவின் கணவர் மகேஷ்பாபு பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, தம்முடன் வேலை செய்யும் ஒருவரை 2வது திருமணம் செய்ய கல்பனா முடிவு செய்தார். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணன், கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். சரணவன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
போலீசில் சரவணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
கல்பனா அழகாக இருப்பாள். அவள் மீது எனக்கு மோகம் ஏற்பட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பிறகும் கல்பனாவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு போவேன். அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவரை பிரிந்த கல்பனா, 2வது திருமணம் செய்ய முயன்றார்.
எனக்கு ஆசை நாயகியாக தொடர்ந்து இருக்கும்படி கூறினேன். மறுத்ததால் அவளை கொலை செய்துவிட்டு தப்பினேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சரவணனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.