நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: சமாஜ்வாதி கட்சியினருக்கு முலாயம் உத்தரவு
லக்னோவில் நடைபெற்ற ராம்மனோகர் லோகியாவின் 102-வது பிறந்தநாள் விழாவில் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:
சட்டப் தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற்றுவிட்டோம் என்று நாம் மமதையில் இருந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வரலாம்.
எனவே கட்சித் தொண்டர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு 2014 ம் ஆண்டுதான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. எனவே கட்சித்தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுப்பணியிலும், மக்கள் சேவையிலும், வளர்ச்சிப்பணிகளிலும் நாம் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நமது கட்சியின் பலத்தை மேலும் வளர்க்க முடியும் என்றார் அவர்.
லக்னோ பேரணியில் கலந்து கொண்ட சமாஜ்வாதி தொண்டர்கள், நாட்டின் அடுத்த பிரதமர் முலாயம்சிங் யாதவ் என்று முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.