எம்.எல்.ஏ. கடத்தல் - ஒரிசா பேரவையில் அமளி- மீட்க 2 அமைச்சர்களை அனுப்பிய நவீன்பட்நாயக்
புவனேஸ்வர்: மாவோயிஸ்டுகளால் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா கடத்தப்பட்ட விவகாரம் ஒரிசா மாநில சட்டப்பேரவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ.வை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்காக 2 அமைச்சர்களை கோரபுட் மாவட்டத்துக்கு முதலமைச்சர் நவீந்பட்நாயக் அனுப்பியுள்ளார்.
ஒரிசா மாநிலத்தின் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா அதிகாலையில் மாவோயிஸ்டுகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இன்று காலை ஒரிசா பேரவையில் எதிரொலித்தது. காலையில் அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். தொடரும் மாவோயிஸ்டுகளின் கடத்தல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் நவீன்பட்நாயக் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கடும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே பேரவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த முதலமைச்சர் நவீன் பட்நாயக், மாவோயிஸ்டுகளிடமிருந்து எம்.எல்.ஏ.வை மீட்கும் நடவடிக்கைக்காக சூர்ய நாராயண் பத்ரா மற்றும் லால்பிகாரி ஹிமிரிகா ஆகியோரை கோரபுட் மாவட்டத்துக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
கடத்தியது யார்?
இதனிடையே எம்.எல்.ஏ.வை கடத்தியது யார் என்ற புதிய குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயுதந்தாங்கிய நபர்களால் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டது உறுதி என்றாலும் மாவோயிஸ்டுகள் தாங்கள்தான் கடத்தினோம் என்று பொறுப்பேற்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் எம்.எல்.ஏ.வின் ஓட்டுநர், கடத்தியது மாவோயிஸ்டுகள்தான் என்றும் அவர்கள் எம்.எல்.ஏ.வின் வாகனத்தில் போஸ்டர்களை ஒட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
கோரபுட் மற்றும் மல்காங்கிரி மாவட்டங்களில் முகாமிட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையை நிறுத்தி படையினரின் பசுமை வேட்டை என்ற தங்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் கோரிக்கை.