மாநிலங்களவை எம்.பியான சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி எப்போது?
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சிரஞ்சீவி அளித்த பேட்டி:
அமைச்சர் பதவி?
கேள்வி: மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள நீங்கள் விரைவில் மத்திய அமைச்சராகப் பதவி ஏற்க இருப்பதாகவும், அதற்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறதே?
பதில்: காங்கிரஸ் தலைமையிடம் எந்தவித பதவியும் நான் கேட்கவில்லை. தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்தார்கள். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். எந்த பதவியும் தாருங்கள் என காங்கிரஸ் தலைமையை கேட்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றதும் மத்திய அமைச்சர் பதவி தருவார்கள் எனக்கூறி அர்த்தமற்ற வதந்தியை பரப்பி உள்ளனர்.
காங்கிரஸ் தோல்வி
கேள்வி:ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற வேண்டி உங்கள் கட்சியை இணைத்தீர்கள். ஆனால் தற்போது நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து உள்ளதே?
பதில்: ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடையவில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் பலவீனம் அடைந்துவிட்டது என கூறமுடியாது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை பலம் கொண்ட, வலிமை மிக்க கட்சியாக மாற்றவேண்டிய பணியை செய்ய போகிறேன். இதற்காக காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் இந்த பணியை விரைவில் தொடங்க உள்ளேன்.
காங்கிரஸ் தலைவர் பதவி?
கேள்வி: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி உங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறதே?
பதில்: இதுபற்றி எனக்கு தெரியாது. பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் அவர்.