தண்ணீர்ப் பந்தல் அமைத்து மக்களை கோடைக் கொடுமையிலிருந்து காக்க விஜயகாந்த் வேண்டுகோள்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. மக்களுக்கு ஆண்டுக்கணக்கில் மின்வாரியம் தொடர்ந்து அமல்படுத்தும் மாபெரும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது.
குடிக்க தண்ணீர் முதல் தூங்குவதற்கு மின்விசிறி வரை மின்சாரம் இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது. இந்த கோடை காலம் எப்பொழுது முடியுமோ என்ற ஏக்கம்தான் இன்று மக்களிடம் மேலோங்கி உள்ளது.
மக்களுக்கு உதவிட நாம் தண்ணீர் பந்தல்கள் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை செய்வது வாடிக்கையாகும்.
அதற்கொப்ப இந்த ஆண்டும் தே.மு.தி.க. சார்பில் கழக நிர்வாகிகளும், கழக அணியினரும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழிவகுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.