மாவோயிஸ்டுகளிடையேயான போட்டியால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. உயிருக்கு ஆபத்து: மத்திய அரசு தகவல்
கோராபுட்: மாவோயிஸ்டுகளிடையேயான மோதலால் கடத்தப்பட்ட ஆளும் பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏ. ஜிகா ஹிகாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது..
ஒரிசா மாநிலத்தில் 2 இத்தாலியர்கள் கடத்தப்பட்டதற்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்றிருந்தனர். அரசுடனான பேச்சுகளைத் தொடர்ந்து ஒரு இத்தாலியர் மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே ஆயுதந்தாங்கிய குழுவினரால் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜிகா ஹிகா கடத்தப்பட்டார். ஆனால் கடத்தியது பற்றிய மாவோயிஸ்டுகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இத்தாலியர்களை ஒரிசா மாநில மாவோயிஸ்டுகள் கடத்தியதாகவும் எம்.எல்.ஏ.வை ஆந்திர மாநில மாவோயிஸ்டுகள் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளின் இரு மாநில பிரிவுகளிடையேயான போட்டியால் அடுத்தடுத்து கடத்தல் சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உளவுத்துறை தெரிவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய போட்டியால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.