ஆபரேஷன் 'ஹம்லா' துவக்கம்: இன்றும், நாளையும் கடலோர பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
தூத்துக்குடி: தமிழக கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் ஹம்லா எனப்படும் தீவிரவாத தடுப்பு ஒத்திகை இன்று அதிகாலை துவங்கியது. இந்த ஒத்திகை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு நடைபெறுகிறது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒரு முறை நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடந்து வருகிறது.
போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு படை, மாநில உளவுத் துறையினர், கஸ்டம்ஸ், மாநில வருவாய் புலனாய்வு துறை மற்றும் ஓசிஐயூ ஆகிய 10 துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவினர் தீவிரவாதிகள் போன்று செயல்படுவார்கள், மற்றொரு பிரிவினர் அவர்களை மடக்கிப் பிடிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான ஒத்திகை இன்று அதிகாலை துவங்கியது. இது தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.