புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்திற்கு வனத்துறையின் அலட்சியமே காரணம்: விசாரணை கமிஷன் அறிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு வனத்துறையின் அலட்சியம் தான் காரணம் என நீதிபதி ஹரிஹரன் நாயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. மகர விளக்கு பூஜை தினத்தன்று மாலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கடந்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர ஜோதியை பார்த்துவிட்டுசபரிமலையில் உள்ள புல்மேடு பகுதியில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஜோதியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஹரிஹரன் தலைமையிலான விசாரணை கமிஷனை கேரள அரசு நியமித்தது. இந்த கமிஷன் சில மாதங்களுக்கு முன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் எதிர்காலத்தில் இதுபோன்று விபத்து நடக்காமல் தடுப்பதற்கு 30க்கும் மேற்பட்ட அறிவுரைகளை வழங்கியது.
இந்நிலையில் கேரள அரசிடம் கமிஷனின் இறுதி அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வனத்துறையின் அலட்சியம் தான் விபத்துக்கு முக்கிய காரணம். ஜோதியை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் புல்மேட்டில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை செய்யவில்லை. நெரிசல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இனிமேல் இதுபோன்று விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.