ராமர் பாலம் தேசிய சின்னமாகுமா?: பதிலளிக்க அவகாசம் கோரும் மத்திய அரசு
உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோர் மத்திய அரசுக்கு ஒரு கேள்வியை எழுப்பினர்.
''பழமையான ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவித்து விடலாமா? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளில் அறிவுரைகள் பெற்று தெரிவியுங்கள். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்'' என்றனர்.
வழக்கின் அடுத்த விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனது பதிலை அளிக்க மத்திய அரசு 2 வார காலம் அவகாசம் கேட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்னதாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 19க்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கை மத்திய அரசு வேண்டுமென்றே காலம் கடத்துவதாக சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டினார்.