எனது தந்தை பிரதமராக இருக்கையில் லஞ்சம் கொடுக்க முயன்றனர்: குமாரசாமி 'குண்டு'!
இது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தை தேவேகவுடா பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பெற சில தரகர்கள் அவரை அணுகி லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்றார். ஆனால் லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது தேவேகவுடா என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதேபோல இந்தப் புகாருக்கான ஆதாரத்தையும் அவர் தரவில்லை.
தேவேகவுடா 1-6-1996 முதல் 11-4-1997 வரை பிரதமராக இருந்தார். குமாரசாமி இத்தனை ஆண்டுகளாக வாய் திறக்காமல் இருந்துவிட்டு தற்போது ராணுவ தளபதியின் விவகாரம் பூதாகரமாகும்போது ஏன் கூறியுள்ளார் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், சிங் சொன்னதைப் பார்த்து தூண்டுதலாகி பழைய கதையை இப்போது சொல்லியுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பெற ஒரு நிறுவனம் தனக்கு ரூ.14 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்தது என்று ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அதிர்ச்சியே அடங்காத நிலையில் பிரதமராக இருந்த ஒருவருக்கே லஞ்சம் கொடுக்க முன்வந்தனர் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேவேகவுடாவுக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தனர் என்பதில் இருந்து பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுப்பது சாதாரண விஷயம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் பல்வீர் புஞ்ச் தெரிவித்துள்ளார்.