சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தோடு கடந்த 2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சேது சமுத்திர திட்டப் பணியைத் தொடங்கியது. இப்பணிகள் பாதியளவு முடிவடைந்த நிலையில் மத நம்பிக்கை என்ற பேரில் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இத்திட்டத்தை முடக்கும் வேலையில் ஈடுபட்டன.
குறித்த காலத்தில் திட்டம் நிறைவேற்றப்படாததால் திட்டச் செலவு ரூ.2,400 கோடியிலிருந்து 2009ம் ஆண்டின் கணக்கீட்டின்படி ரூ.4,500 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் வல்லுநர் பச்சோரி தலைமையிலான குழுவின் பரிந்துரை என்ற பெயரிலும், மக்களின் நம்பிக்கை என்ற பெயரிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொடர்ந்து தேவையற்ற காலதாமதத்தை செய்து வருகிறது.
திட்டப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதிகளில் மணல் குவிந்து தூர்ந்து போய் வருகிறது. மேலும் காலதாமதம் செய்வது அரசிற்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஏற்கனவே பல ஆண்டுகளாக பல வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டு, 6வது வழித்தடம் மட்டுமே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டப் பணிகளை எந்தவித ஊசலாட்டத்திற்கும் இடம் தராமல், நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.