பட்டா விவகாரம்: செங்கோட்டை துணை தாசில்தாரை கடத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடி
தென்காசி: தென்காசி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய காலதாமதமானதால் துணை தாசில்தாரை கடத்தி கொல்ல முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தால் வருவாய் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் நேற்று செங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் உள்ள பட்டுப்போன மரங்களை பார்வையிட சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த பிரபல ரவுடியான உதயசெல்வன்பட்டியைச் சேர்ந்த அருமை நாயகம் என்பவர் துணை தாசில்தாரிடம் சென்று தனது பெயருக்கு இடத்தை பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கொடுத்த மனுவை திருப்பி அனுப்பி காலதாமதாக பட்டா வழங்கியது ஏன் என்று கேட்டு தகராறு செய்தார்.
திடீரென அவர் பாலசுப்பிரமணியத்தை பைக்கில் ஏற்றி தனது தோப்புக்கு கடத்திச் சென்று சரமாரியாக தாக்கினார். அரிவாளால் பாலசுப்பிரமணியனின் பிடரியில் தாக்கி கொலை செய்ய முயன்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே அந்த ரவுடி தப்பி சென்றார். இது குறித்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்துல் ரகுமான், ஜோசப் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அருமை நாயகத்தை கைது செய்தனர்.