மலேசியாவில் இருந்து மிளகாய் பொடிக்குள் ரூ.25 லட்சம் போதைப் பொருள் கடத்தி வந்த பலே பெண்
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் மிளகாய் பொடிக்குள் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஏர்- ஏசியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த ஒரு பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மிளகாய் பொடி, மஞ்சள் மற்றும் மல்லிப்பொடி பாக்கெட்டுகள் இருந்தன. அந்த பெட்டியை கீழே கொட்டிப்பார்த்தபோது அதில் வெள்ளை நிற பவுடர் உள்ள சின்ன, சின்ன பாக்கெட்டுகள் இருந்தன.
அந்த பவுடரை பரிசோதனை செய்து பார்த்தபோது அது எபிதெரின் என்னும் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 கிலோ எடையுள்ள அந்த பவுடர் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
கோவையை சேர்ந்த ருக்மணி (51) என்பவரின் பெயருக்கு அந்த பார்சல் வந்திருந்தது. அதை எடுத்துச் செல்ல அவர் விமான நிலையத்திற்கு வந்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கடந்த 19ம் தேதி திருச்சியில் இருந்து மலேசியா சென்றுவிட்டு 21ம் தேதி திரும்பி வந்ததும், அவர் திரும்பி வந்தபோது எடை அதிகமாக இருந்ததால் போதைப் பொருள் உள்ள பெட்டியை பார்சலில் அனுப்பி வைத்துவிட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடு்தது ருக்மணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ருக்மணிக்கும், போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.