அதிகாலையில் அம்மா மண்டபம் சென்றாரா ராமஜெயம்?-செல்போன் மூலம் புதிய துப்பு??
ராமஜெயம் தினசரி காலையில் தனது வீட்டிலிருந்து ஊழவர் சந்தைப் பகுதியில் வாக்கிங் போவது வழக்கம். அதன்படியே நேற்றும் காலையில் வாக்கிங் போனார். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில்தான் அவரது உடலை கல்லணை அருகே, திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வைத்து போலீஸார் பிணமாக மீட்டனர்.
தற்போது இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், மணிமாறன், சிகாமணி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாக வழக்கை விசாரித்து வருகின்றனர்.
வழக்கமாக குற்றவாளிகளை எளிதில் சிக்க வைக்கும் செல்போன் பதிவுகளைத்தான் இந்த வழக்கிலும் போலீஸார் பெருமளவில் நம்பியுள்ளனர். அதன்படி தற்போது ராமஜெயத்திற்கும், ராமஜெயம் வீட்டுக்கும் கொலை நடப்பதற்கு முன்பு பேசியவர்கள் யார் என்ற பட்டியலை தயாரித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதில் சில முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, திருச்சி காவிரிக் கரையில் உள்ள அம்மா மண்டபம் பகுதியிலிருந்து சம்பவம் நடந்த நேற்று அதிகாலை 3 மணி, 4 மணி மற்றும் 4.30 மணிக்கு ராமஜெயத்தின் செல்போனிலிருந்து தொலைபேசி அழைப்பு போயுள்ளது.
அதேபோல காலை 8.10 மணிக்கு ராமஜெயத்திற்குச் சொந்தமான கேர் கல்லூரிக்குப் போன் போட்டு, கே.என்.நேருவின் தொலைபேசி எண்ணைக் கேட்டுள்ளனர்.
இந்தப் புதிய தகவலால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அம்மா மண்டபத்திற்குப் போயிருந்தாரா ராமஜெயம என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை போயிருந்தால் அந்த நேரத்திற்கு அவர் ஏன் அங்கு சென்றார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இல்லை போலீஸாரைத் திசை திருப்ப கொலையாளிகள் இப்படிப் பேசிக் குழப்பியுள்ளனரா என்ற கோணத்திலும் போலீஸார் யோசித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த தொலைபேசி அழைப்புகளை முக்கிய துப்பாக போலீஸார் கருதுவதால் இதை வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, ராமஜெயத்தைக் கொல்வதற்கு முன்பு அவரை சித்திரவதை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது கையில் சிராய்ப்புக் காயங்கள் காணப்படுவதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.