காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 24 பேரும் நீதிமன்றத்தில் ஏப்-9ல் ஆஜராக உத்தரவு
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கை புதிய நீதிபதி முருகன் விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 5 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி முருகன் ஜெயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட 24 பேரும் ஏப்ரல் 9-ந் தேதியன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
புதுநீதிபதி
காஞ்சி சங்கரராமன் வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார். ஆனால் வழக்கில் தமக்கு சாதகமாக செயல்பட நீதிபதி ராமசாமியிடம் ஜெயேந்திரர் தொலைபேசி மூலம் பேரம் பேசும் ஒலிநாடா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிபதி ராமசாமி பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார்.காஞ்சி சங்கரராமன் வழக்கை புதிய நீதிபதி முருகன் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று விசாரணை நடைபெற்றது.