ஓய்வு பெற்றார் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண்!
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். கடந்த 36 ஆண்டுகளாக காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர் இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னையில் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. அதில் டிஜிபி ராமானுஜம் உள்பட ஏராளமான போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லத்திகா சரண் கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி கேரள மாநிலம் இடுக்கியில் பிறந்தார். அவர் 1976ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்தார். ஏடிஜிபி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் பயிற்சி மற்றும் திட்ட இயக்குனர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
அவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி கிரேட்டர் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்தியாவின் இரண்டாவது பெண் டிஜிபி மற்றும் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் சிபிஐ மற்றும் சிபிசிஐடி துறைகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்
லத்திகா சரண் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இருந்தபோது பல சர்ச்சைகளை சந்தித்தவர். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியின் கீழ் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது, பெரும் முறைகேடுகள் நடந்தன. இந்த சர்ச்சையில் லத்திகாவும் சிக்கினார்.
பின்னர் டிஜிபி பதவிக்கு நியமிக்கப்பட்டபோதும் லத்திகா சர்ச்ச்சையில் சிக்கினார். தன்னை விட ஜூனியரான லத்திகாவை டிஜிபியாக நியமித்ததை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் அப்போது அவரை விட சீனியரான நடராஜ். இதுதொடர்பாக சட்டப் போராட்டம் வெடித்தது. இறுதியில் நடராஜ் வென்றார். ஆனால் அப்போது அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்த நிலையில் லத்திகா தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட நேர்மையான அதிகாரி என்ற பெயரைப் பெற்ற பெருமைக்குரியவர் லத்திகா என்பது குறிப்பிடத்தக்கது.