ஏலக்காய் உள்ளிட்ட 7 விளைபொருட்களின் முன் பேர வர்த்தகத்திற்கு தடை வருமா?
மும்பை: ஏலக்காய், உருளைக்கிழங்கு உட்பட 7 விளைபொருட்களின் முன்பேர வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் ஏலக்காய் விலை 185 சதவீதமும், உருளைக்கிழங்கு விலை 170 சதவீதமும், புதினா எண்ணெய் விலை 172 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடுகு, உருளைக்கிழங்கு, சோயாபீன், கொண்டைக்கடலை, ஆகிய விளைபொருள்கள் விலை உயர்வதால் உணவு பணவீக்கம் அதிகரித்து, நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
செயற்கையான முறையில் விலையை உயர்த்தும் வகையில், லாப நோக்கம் கருதி, ஊக அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறதா என்பது குறித்து எஃப்.எம்.சி. ஆய்வு செய்து வருகிறது.
கொத்தவரங்காய் விலை கடந்த ஓர் ஆண்டு காலத்தில் 4 மடங்கு முதல் 9 மடங்கு வரை உயர்ந்தது. இதனையடுத்து, என்.சி.டீ.இ.எக்ஸ். முன்பேர சந்தையில் இதன் மீது வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கொத்தவரங்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் சந்தையில் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 குறைந்தது.
பொருள்கள் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற, இறக்கங்களால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் முன்பேர வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்படி, ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு இரண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சில முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்படுவதால், பொருள்கள் விலை செயற்கையான முறையில் உயருகிறது.
லாப நோக்கம்
ஏழு விளைபொருள்கள் விலை உயர்வுக்கு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அந்த பொருள்களின் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது