தூத்துக்குடியில் 12 மணிநேரம் வாட்டும் மின்வெட்டால் இன்வெர்ட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு
தூத்துக்குடி: கடும் மின்வெட்டு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்வெர்ட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மின்தடை 12 மணி நேரத்தையும் தாண்டியுள்ளது. இதனால் முதலில் அங்கொன்றும், இங்கொன்றுமாக விற்பனையாகி வந்த இன்வெர்ட்டர் தற்போது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அத்தியவாசியப் பொருளாக மாறியுள்ளது.
ரூ.7,000 முதல் 50,000 வரையில் கிடைக்கும் இந்த இன்வெர்ட்டர்களை வாங்க தற்போது பொதுமக்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. விற்பனை பிரதிநிதிகள், சர்வீஸ்மேன்கள், டெலிவரி பாய்ஸ் என பல வழிகளில் இதில் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இன்வெர்ட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்வெர்ட்டர்கள் வாங்க முன்பதிவு செய்துவிட்டு 1 வாரம் முதல் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் இன்வெர்ட்டர்களுக்கு 1 மாதத்திற்கு முன்னர் புக் செய்தால் தான் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த தட்டுப்பாட்டால் இன்வெர்ட்டர் விலை சற்றே உயர்ந்தும் வருகிறது. இன்வெர்ட்டர்களுடன் இணைந்து வரும் பேட்டரிகளுக்கும் தட்டுப்பாடாக உள்ளது.