தீயசக்திகளிடமிருந்து தப்ப சரமாரியாக கருப்பாடுகளை பலி கொடுக்கும் சர்தாரி !
பாகிஸ்தானில் மூடநம்பிக்கைகளுக்கு பெயர்போனவர் சர்தாரி. அவரது மத நம்பிக்கை பற்றி அந்நாட்டு ஊடகங்கள் பல்வேறு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
தீய சக்திகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சர்தாரி கருப்பாடுகளை பலி கொடுப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுபோல ஆடுகளைப் பலி கொடுத்தால், தன்னை தீய சக்திகள் அண்டாது என்று வலுவாக நம்புகிறாராம் சர்தாரி. மேலும் அவர் அதிபாரனதில் இருந்து பல கருப்பாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வரும் 8ம் தேதி இந்தியா வருகிறார். அவர் அஜ்மீர் தர்கா செல்லும் முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார்.
கடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் கூறுகையில்,
ஏப்ரல் 8ம் தேதி அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் வழியில் டெல்லியில் மதிய விருந்துக்கு வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஏற்றுக்கொண்டார். அவர் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபடுவார். வழிபாட்டை முடித்துக் கொண்டு அவர் அன்றே இஸ்லாமாபாத் திரும்புகிறார் என்றார்.
கடந்த 2009ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டின்போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தாரி தர்காவில் வழிபட வந்தாலும் அவருடன் சில அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச இந்திய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.