திருப்பதி மலைப் பாதையில் ஓடியாடிய சிறுத்தைகள், பதறிய பக்தர்கள்
திருமலை: திருப்பலை மலைப்பாதையில் நேற்று இரவு 4 சிறுத்தைகள் நடமாடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
திருப்பதி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கமாகிவிட்டது. அவை நடமாடுவதும் அதைப் பார்த்து பக்தர்கள் பதறியடித்து ஓடுவதும், வனத்துறையினர் வந்து கூண்டு வைத்து பிடிப்பதும் சாதாரண விஷயமாகிவிட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் உள்ள ஹரிணி ஓய்வு மையத்திற்கு அருகே நேற்றிரவு 4 சிறுத்தைகள் சுற்றித் திருந்தன.
அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த பக்தர்கள் 4 சிறுத்தைகளை ஒரு சேரப் பார்த்ததில் பீதியடைந்தனர். உடனே இது குறித்து தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசாரும், வனத்துறையினரும் ஓய்வு மையத்திற்கு வந்தனர். ஆனால் அப்போது சிறுத்தைகள் அங்கு இல்லை. தேடிப் பார்த்ததில் அவை காட்டுக்குள் சென்றுவிட்டது தெரிய வந்தது.