இலவசமாக கொடுத்த ஆடு, மாடுகளை சரியாக பராமரிப்போருக்கு புத்தாண்டுக்குப் பரிசு- அரசு
சென்னை: தமிழக அரசு ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிய ஆடுகளையும், மாடுகளையும் சிறப்பாகவும், முறையாகவும் பராமரித்து வந்தால், அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கறவை மாடுகளை சிறப்பாக பராமரிப்பவர்களில் 10 பேர்களை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும். அதேபோல் ஆடுகளை பராமரிப்பவர்களில் மாவட்டத்துக்கு 15 பேர்களை தேர்ந்தெடுத்தும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
மாட்டுக்கு முதல் பரிசு ரூ. 5000-ஆட்டுக்கு ரூ.3000
இதில் கறவை மாடுகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.4 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரமும் அறுதல் பரிசாக 7 பேர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
இதேபோல் ஆடுகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.2,500-ம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 12 பேருக்கு ரூ.1000-ம் வழங்கப்பட உள்ளது.
பணமாக கிடைக்காது, தீவனமாக தருவார்கள்
இந்த பரிசுகள் பணமாக யாருக்கும் வழங்கப்படாது. மாடுகளுக்கான பரிசுகள் ஆவின் மூலம் தினமும் தீவனமாக வினியோகிக்கப்படும். இதற்கான தொகையை ஆவினுக்கு அரசு செலுத்திவிடும்.
இதேபோல் ஆடுகளுக்கான தீவனம் கால்நடை உதவி மருத்துவர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை கால்நடை துறைக்கு அரசு வழங்கிவிடும். பரிசுக்குரியவர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுவதை தவிர்க்க பொதுவான தேர்வு முறை கொண்டு வரப்படும்.
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர், பேராசிரியர், துறை தலைவர் ஆகியோர் கொண்ட குழு சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்யும். இதேபோல் கால்நடை உதவி மருத்துவர்கள் சிறந்த ஆடுகளை தேர்வு செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் சரி பார்த்து அறிவிப்பார்.
வருகிற 13-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று சிறந்த ஆடு-மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.