2 வாரங்களில் நாடு கடத்தப்படும் ஒசாமா மனைவிகள், குழந்தைகள்
கடந்த ஆண்டு மே மாதம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அப்போத்தாபாத் வீட்டில் வைத்து அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்பட 14 பேரை பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் அழைத்துச் சென்று அங்கு ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அந்த வீட்டையே கிளை சிறையாக மாற்றினர்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒசாமா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
ஒசாமாவின் இளைய மனைவி அமல் அப்துல் பத்தாஹ் ஏமனைச் சேர்ந்தவர். அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவருக்காக வாதாட முகமது ஆமீர் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்தார் அவரது சகோதரர் ஜகரியா அகமத் அப்துல் பத்தாஹ்.
இந்நிலையில் ஒசாமாவின் 3 மனைவிகள், 2 மகள்கள் மீது சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு வந்து தங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு ஒன்றரை மாதம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், தண்டனை முடிந்த பிறகு நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதியே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதால் இன்னும் 2 வாரங்களில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.