மும்பை தாக்குதலில் ஒசாமாவுக்கு முக்கிய பங்கு: அமெரி்க்கா
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் வைத்து அமெரிக்கப் படைகளால் கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்த வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணினி ஆகியவற்றை அமெரிக்கப் படைகள் பறிமுதல் செய்தன. அந்த ஆவணங்களின் மூலம் ஒசாமாவுக்கும் மும்பை தாக்குதல்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஒசாமாவுக்கும், அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கும் தொடர்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்கள் கொரியர் மூலம் தகவல்களை பறிமாறிக்கொண்டுள்ளனர். இந்த தொடர்பு ஒசாமா கொல்லப்படும் வரை நீடித்துள்ளது.
அமெரிக்கா சயீதின் தலைக்கு பரிசு அறிவித்துள்ளதை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக சயீதை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரியும் பாகிஸ்தான் கண்டுகொள்ளாமலேயே உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். இன்னும் சயீத் விஷயத்தில் பாகிஸ்தான் கண்டும், காணாமல் தான் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே சயீத் கூறுகையில், எங்கள் தலைக்கு பரிசு அறிவிக்க நாங்கள் ஒன்றும் பயந்து குகைக்குள் ஓடி ஒளியவில்லை என்று தெரிவித்துள்ளார். பிறர் எதிர்பார்ப்பதைவிட மும்பை தாக்குதலில் ஒசாமாவுக்கு பெரிய பங்கு உள்ளது என்று கூறப்படுகிறது.