சென்னைக்கு மே மாதம் வருகிறது கிருஷ்ணா தண்ணீர்?
தெலுங்கு கங்கை திட்ட கால்வாயில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் மே முதல் வாரத்தில் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இது இரண்டு தடவையாக பெறப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வர வேண்டும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் மதகு பகுதி சேதம் அடைந்ததால் முதற்கட்ட தண்ணீர் வரவில்லை.
இதே போல், சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வரும் தெலுங்கு கங்கை திட்ட கால்வாயிலும் ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.
தற்போது மதகு பகுதியில் இருந்து குழாய் மூலம் கிருஷ்ணா தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால்வாய் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட ஆந்திர அரசு தயாராக உள்ளது என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகம், ஆந்திரா இடையே கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து போடப்பட்ட ஒப்பந்தப்படி இது வரை முழுமையான நீர் ஒருமுறை கூட தமிழ்நாட்டிக்கு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.