எனக்கும், சர்தாரிக்கும் வசதிப்படும் நேரத்தில் பாக். செல்வேன்-மன்மோகன் சிங்
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இன்று டெல்லி வந்தார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மதிய விருந்தளித்துக் கெளரவித்தார்.
பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரை மணி நேரம் இரு தலைவர்களும் பேசினர். அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சர்தாரியின் மகன் பிலாவலும் உடன் இருந்தார்.
மன்மோகன் சிங் கூறுகையில், அதிபர் சர்தாரி தனிப்பட்ட பயணமாக வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இரு நாடுகளிடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தேன்.
பேச்சுவார்த்தை மற்றும் அவரது பயணத்தின் விளைவுகள் எனக்கு திருப்தி அளித்துள்ளன. என்னை பாகிஸ்தானுக்கு வருமாறு அதிபர் சர்தாரி அழைத்துள்ளார். இருவருக்கும் பொருத்தமான, சரியான, நேரத்தில் அங்கு செல்வதை நான் விரும்புகிறேன்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே உறவுகள் சுமூகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு நடைமுறையில் சாத்தியமாகக் கூடிய தீர்வுகளைக் காண வேண்டும். அதுதான் நானும், அதிபர் சர்தாரியும் இரு நாட்டு மக்களுக்கும் தரும் செய்தியாகும் என்றார் பிரதமர்.
சர்தாரி பேசுகையில், இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மன்மோகன் சிங் என்னை மதிய உணவுக்கு அழைத்துக் கெளரவித்திருப்பதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். விரைவில் இருவரும் பாகிஸ்தான் மண்ணில் சந்திப்போம் என்று நம்புகிறேன் என்றார்.