விதம் விதமான உணவு வகைகளைப் பரிமாறி சர்தாரியை வியப்பில் ஆழ்த்திய மன்மோகன் சிங்!
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இன்று பிற்பகல் டெல்லி வந்தார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் மதிய உணவு விருந்தளித்தார். இந்த விருந்தில் தடபுடலான ஐட்டங்கள் ஏராளமாக இடம் பெற்றிருந்தன.
ஜெய்தூனி சீக் , கோஸ்ட் பாரா கபாப், பிந்தி குர்ஜுரி, பிர்னி என சகலவிதமான ஐட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தது இந்த விருந்தின் முக்கிய அம்சமாகும். தென்னகத்து மினி மசாலா தோசை, கிழக்கு இந்தியாவின் சந்தேஷ், வடக்கில் பிரபலமான கபாப் என விருந்து கலகலப்பாக, மொறுமொறுப்பாக சுவையோடு இருந்தது.
தர்பூசணியுடன் விருந்தைத் தொடங்கியுள்ளனர். சூப்பு, மினி மசாலா தோசை ஏன ஒவ்வொன்றாக அணிவகுத்து பாகிஸ்தான் விருந்தினர்களை வியப்படைய வைத்ததாம். சைவம், அசைவம் என இரு வகை உணவுகளும் பரிமாறப்பட்டன.
மட்டன், சிக்கன் என விதம் விதமான அசைவ வகை உணவுகள் பாகிஸ்தானியர்களை அசத்தின. காச்சி கோஸ்ட் பிரியாணிதான் இதில் விசேஷமானது. தமிழகத்தின் அவியலும் இந்த விருந்தில் இடம் பெற்றிருந்தது.
மொத்தத்தில் பாகிஸ்தான் அதிபர் மற்றம் அவருடன் வந்தவர்கள் இந்திய வகை உணவுகளை திருப்திகரமாக ருசி பார்த்து சந்தோஷமடைந்தார்கள் என்று கூறப்படுகிறது.