குச்சிகள் தட்டுப்பாடு: தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் பாதிப்பு
தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ஏழாயிரம் பண்ணை, எட்டையபுரம், குடியாத்தம் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழலில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்பின், மட்டி, சடைச்சி, பாலை ஆல்பீசியா ரப்பர் மரங்களில் இருந்து தீக்குச்சிகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த மரங்கள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக குச்சி அடுக்குவது, மருந்தில் நனைப்பது போன்ற பணிகள் தற்போது இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஆல்ப்பீசியா, மட்டி, சடைச்சி, ஆஸ்பின் மரக்குச்சிகளை இயந்திரத்தில் அடுக்கலாம்.
கேரளாவில் மட்டி, ஆல்பீசியா மரங்கள் வெட்டப்பட்ட பிறகு மீண்டும் நடவு செய்யப்படாமல் அதிக லாபம் தரும் தேக்கு, ரப்பர் மரங்கள் நடப்படுவதால் தீக்குச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.22க்கு விற்கப்பட்ட குச்சி தற்போது ரூ.42 க்கு விற்கப்படுகிறது.
தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற ஜப்பான் தமிழகத்திற்கு வழங்க உள்ள ரூ.600 கோடி நிதி உதவி திட்டததில் ஆண்டுக்கு 1 கோடி மட்டி மரங்கள் நடுவதற்கு தமிழக வனத்தறை ஏற்பாடு செய்வதுடன், தீக்குச்சிகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.