தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தாலே நல்லுறவு: சர்தாரியிடம் மன்மோகன் கரார்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் வழிபடுவதற்காக நேற்று இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பிரதமர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மதிய விருந்து அளித்தார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் அதிலும் குறிப்பாக மும்பை தாக்குலதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பதைப் பொறுத்தே இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு அமையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இந்தய வெளியுறவுச் செயலாளர் ரஞச்ன் மத்தாய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை தாக்கும் நோக்கில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்தாரியை பிரமதர் வலியுறுத்தினார். அதிலும் ஹபீஸ் சயீத் பெயரைக் குறிப்பிட்டு பிரமதர் பேசினார். மேலும் சர்வதேச விவகாரங்கள், பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றார்.
இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதாகவும் இருந்ததாக சர்தாரி தெரிவித்தார். மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுக்கு அழைத்த அவர் தங்கள் அடுத்த சந்திப்பு பாகிஸ்தானில் நடக்கும் என்று மேலும் தெரிவித்தார். உரிய நேரத்தில் பாகிஸ்தான் செல்வேன் என்றும், அந்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, அமைச்சர்கள் என 40 பேர் வந்திருந்தனர். அவர்கள் விருந்திற்குப் பிறகு அஜ்மீ்ர் தர்கா சென்றனர். அங்கு வழிபட்ட சர்தாரி தர்காவுக்கு ரூ.5,13,19,400 காணிக்கையாகத் தருவதாக அறிவித்துள்ளார்.
விருந்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பிலாவல் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ராகுல் பிலாவலை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் பிலாவல் தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.