தமிழ்நாட்டுப் பக்கம் வராதீங்க, வெயில் வெளுத்துக் கட்டுது!
கடந்த கோடை காலத்தைப் போல இல்லை இந்த ஆண்டு. ஐபிஎல் டுவென்டி 20 போட்டி போல எடுத்த எடுப்பிலேயே பிக்கப் ஆகி மக்களை சிதறடிக்க ஆரம்பித்துள்ளது. கோடை காலம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை எங்கு போனாலும் வெயில், வெயில், வெயில்தான். கொடைக்கானல் ஊட்டியிலும் கூட இன்னும் சீசன் முழுமையாக பிக்கப் ஆகவில்லை என்கிறார்கள். அங்கும் கூட லேசான வெயில் அடித்து வருகிறதாம்.
தமிழகத்தின் பல நகரங்களில் பல நாட்களுக்கு முன்பே 100 டிகிரியைத் தாண்டி வெயில் ஓட ஆரம்பித்து விட்டது. கத்திரிக்கு முன்பாகவே இப்படி வெட்டுக் கத்தி போல வெயில் தகித்து வருவதால் மக்கள் விழி பிதுங்கிப் போயுள்ளனர்.
ஒரு பக்கம் கரண்ட் கிடையாது, மறுபக்கம் தலையை சுற்ற வைக்கும் வெயில். இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மக்கள் படும் பாடு சொல்லி மாள முடியாது, சொல்லில் வடிக்க முடியாது. தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்கள் கொஞ்சம் 'புண்ணியம்' செய்தவர்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் பவர் கட். ஆனால் தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கோ பாதி நாள் கரண்ட்டே கிடையாது.
தமிழகம் முழுவதும் கடுமையாக வெயில் அடித்து வரும் நிலையில் வெயிலின் தலைநகரான வேலூரில் வழக்கம் போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
இதேபோல மதுரையில் 102, திருச்சியில் 102, நெல்லையில் 100, சேலத்தில் 99, கோவையில் 97, சென்னையில் 95, கடலூரில் 94, புதுவையில் 94 என வெயில் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் குறைந்த அளவாக 92 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
தொடர்நது வெயில் கடுமையாகி வருவதால், குளிர்பானங்கள், இளநீர், தர்பூஸ், மோர், ஐஸ்க்ரீம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.